Srivaishnavam Practices Essence
Home » SRIVAISHNAVAM 108 Divyadesam - Images & Photographs of Srivaishnava Divya Kshetram Dieties. Bookmark this site!   Text Size   
Jaya Jaya Sri Sudarsana !

Jaya Jaya Sri Sudarsana !

 

rotate_star.gif

 

Naalaayira Divya Prabhandam - Part 1

 

 



nAlAyira divya pirapantam -part I ( 1- 473)
(in Tamil script, unicode/utf-8 format)

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
(பாடல்கள் 1- 473)
பெரியாழ்வார் திருமொழி





This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.

C - Project Madurai 2002
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 1- 473)


திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக|
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
இருவிகற்ப நேரிசை வெண்பா

மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு



காப்பு
குறள்வெண்செந்துறை

1:
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.

2:
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2)

3:
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3

4:
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4

5:
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.

6:
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.

7:
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7.

8:
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8.

9:
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.

10:
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.

11:
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11.

12:
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12.

பெரியாழ்வார் திருமொழி



முதற்பத்து
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)

கலிவிருத்தம்

13:
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.

14:
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.

15:
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.

16:
உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.

17:
கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.

18:
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.

19:
வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.

20:
பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.

21:
கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.

22:
செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10.

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

23:
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1.

24:
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

25:
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3.

26:
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.

27:
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

28:
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.

29:
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே. 7.

30:
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.

31:
அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.

32:
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 10.

33:
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.

34:
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர். வந்துகாணீரே. 12.

35:
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 13.

36:
எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 14.

37:
நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர். வந்துகாணீரே. 15.

38:
விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர். வந்துகாணீரே. 16.

39:
பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17.

40:
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.

41:
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர். வந்துகாணீரே. 19.

42:
அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 20.

தரவு கொச்சகக்கலிப்பா

43:
சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21.

மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

கலித்தாழிசை

44:
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

45:
உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ. 2.

46:
என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.

47:
சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

48:
எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே. தாலேலோ. 5.

49:
ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.

50:
கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

51:
கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ. 8.

52:
மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ. 9.

தரவு கொச்சகக் கலிப்பா

53:
வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10.

நான்காம் திருமொழி - தன் முகத்து
(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)

கலிநிலைத்துறை

54:
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.

55:
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.

56:
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.

57:
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.

58:
அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.

59:
தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.

60:
பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.

61:
சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.

62:
தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

63:
மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.

ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

64:
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1.

65:
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2.

66:
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3.

67:
வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.

68:
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5.

69:
காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6.

70:
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.

71:
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8.

72:
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9.

73:
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10.

74:
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11.

ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

75:
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1.

76:
பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2.

77:
பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே. சப்பாணி. 3.

78:
தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4.

79:
புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி
பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5.

80:
தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே. சப்பானி. 6.

81:
பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7.

82:
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே. சப்பாணி. 8.

83:
அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே. சப்பாணி. 9.

84:
அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10.

தரவு கொச்சகக்கலிப்பா

85:
ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11.

ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

86:
தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1.

87:
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2.

88:
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3.

89:
கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4.

90:
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5.

91:
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6.

92:
படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7.

93:
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8.

94:
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9.

95:
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10.

96:
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11.

எட்டாம் திருமொழி -- பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)

கலித்தாழிசை

97:
பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1.

98:
செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2.


99:
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ
ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3.

100:
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய். அச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4.

101:
கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
அழலவிழித்தானே. அச்சோவச்சோ
ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5.

102:
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே.
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6.

103:
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே. அச்சோவச்சோ
சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7.

104:
என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே. அச்சோவச்சோ
வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8.

105:
கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ
மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9.

106:
துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே. அச்சோவச்சோ
அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10.

தரவு கொச்சகக்கலிப்பா

107:
நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11.

ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால்வந்த கலித்தாழிசை

108:
வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 1.

109:
கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2.

110:
கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3.

111:
நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4.

112:
வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5.

113:
சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான். 6.

114:
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.

115:
மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8.

116:
கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9.

தரவு கொச்சகக்கலிப்பா

117:
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10.


இரண்டாம்பத்து

முதல்திருமொழி - மெச்சூது
(பூச்சிகாட்டி விளையாடுதல்.)
கலித்தாழிசை

118:

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1.

119:
மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2.

120:
காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3.

121:
இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4.

122:
சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5.

123:
செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6.

124:
தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7.

125:
கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8.

126:
பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9.

தரவு கொச்சகக்கலிப்பா

127:
வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10.

இரண்டாம் திருமொழி - அரவணையாய்
(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)

கலிவிருத்தம்

128:
அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1.

129:
வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.

130:
தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.

131:
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.

132:
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.

133:
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.

134:
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.

135:
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.

136:
அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.

137:
ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.

138:
வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11.

மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
(பன்னிருநாமம்: காதுகுத்துதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

139:
போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1.

140:
வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா. இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே. திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா. 2.

141:
வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே.
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே. இங்கேவாராய். 3.

142:
வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான். இங்கேவாராய். 4.

143:
சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ.
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே. திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே. நீஇங்கேவாராய். 5.

144:
விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
கண்ணா. என்கார்முகிலே.
கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6.

145:
முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்.
சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா.
திருவாயர்பாடிப்பிரானே.
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7.

146:
என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8.

147:
மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே?
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா. உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே. 9.

148:
காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா. என்தன்கண்ணே. 10.

149:
கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே. எங்களமுதே.
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா. இங்கேவாராய். 11.

150:
வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா. இங்கேவாராய். 12.

151:
வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே. 13.

நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
(கண்ணனை நீராட அழைத்தல்.)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

152:
வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1.

153:
கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2.

154:
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3.

155:
கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே.
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4.

156:
அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5.

157:
எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே.
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6.

158:
கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே.
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7.

159:
கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8.

160:
பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9.

161:
கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2) 10.

ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)

கலித்தாழிசை

162:
பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1.

163:
பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2.

164:
திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3.

165:
பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4.

166:
கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5.

167:
கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6.

168:
பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7.

169:
உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8.

170:
மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9.

தரவு கொச்சகக்கலிப்பா

171:
கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10.

ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
(காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)

கலித்தாழிசை

172:
வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2) 1.

173:
கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2.

174:
கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3.

175:
ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4.

176:
சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால்
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5.

177:
ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6.

178:
பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7.

179:
மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8.

180:
தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9.

தரவு கொச்சகக்கலிப்பா

181:
அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10.

ஏழாம் திருமொழி - ஆனிரை
(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

182:
ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1.

183:
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.

184:
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.

185:
தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.

186:
புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.

187:
எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.

188:
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.

189:
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.

190:
அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.

191:
செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10.

எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

192:
இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1.

193:
கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்.
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்.
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2.

194:
செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3.

195:
கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய்.
வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4.

196:
பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5.

197:
கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்.
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6.

198:
கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7.

199:
இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.
கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8.

200:
இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்.
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9.

201:
போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2) 10.

ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

202:
வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1.

203:
வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ. வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ. வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா. அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2.

204:
திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்.
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே. 3.

205:
கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா. இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே. 4.

206:
பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.

207:
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
வேதப்பொருளே. என்வேங்கடவா.
வித்தகனே. இங்கேபோதராயே. 6.

208:
செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7.

209:
கேசவனே. இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா. இங்கேபோதராயே. 8.

210:
கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்.
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9.

211:
சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10.

212:
வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே. (2) 11.

பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

கலித்தாழிசை

213:
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1.

214:
குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2.

215:
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3.

216:
தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4.

217:
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5.

218:
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6.

219:
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7.

220:
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8.

221:
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9.

தரவு கொச்சகக்கலிப்பா

222:
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10.


மூன்றாம்பத்து

முதல்திருமொழி - தன்னேராயிரம்
(யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக்
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

223:
தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே.
அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2) 1.

224:
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2.

225:
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3.

226:
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4.

227:
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5.

228:
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே.
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6.

229:
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி.
பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7.

230:
வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன்
காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8.

231:
தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9.

232:
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10.

233:
கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11.

இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)

கலிநிலைத்துறை

234:
அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1.

235:
பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2.

236:
நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3.

237:
வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4.

238:
அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5.

239:
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6.

240:
வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7.

241:
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8.

242:
குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9.

243:
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.

மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

244:
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2) 1.

245:
கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2.

246:
காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்
சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3.

247:
கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே.
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4.

248:
பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே.
எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே.
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5.

249:
அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6.

250:
பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7.

251:
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.

252:
திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9.

253:
புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 10.

நான்காம் திருமொழி - தழைகளும்
(காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

254:
தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2) 1.

255:
வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப்
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2.

256:
சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3.

257:
குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி. வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4.

258:
சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.

259:
சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப்
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6.

260:
சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிரக்
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7.

261:
சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8.

262:
வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9.

263:
விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 10.

ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

264:
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1.

265:
வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2.

266:
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரைப்
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3.

267:
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4.

268:
வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்
அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5.

269:
செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6.

270:
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7.

271:
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8.

272:
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9.

273:
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10.

274:
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த்
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11.

ஆறாம் திருமொழி - நாவலம்
(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)

275:
நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1.

276:
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.

277:
வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழச்
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3.

278:
தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவிக்
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4.

279:
முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5.

280:
செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6.

281:
புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7.

282:
சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக்
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8.

283:
திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9.

284:
கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10.

285:
குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகிச்
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2) 11.

ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

286:
ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1.

287:
வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2.

288:
பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3.

289:
ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4.

290:
நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.

291:
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.

292:
பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7.

293:
காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8.

294:
கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.

295:
பெருப்பெருத்தகண்ணாலங்கள்